நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை, 9 வட்ட மருத்துவமனை, 200-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பணியை புறக்கணித்தனர். நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் லீலாதரன், இந்திய மருத்துவச் சங்க நாமக்கல் கிளை தலைவர் பி.ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் அந்தந்த மருத்துவமனைகள் முன் அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள் சிரமத்துக்குள்ளாயினர்.