கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ்: தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ.2.80 கோடி இலக்கு

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி, ஒசூரில் உள்ள 3 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ. 2.80 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் கூட்டுறவு காலனியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை குத்து விளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். அப்போது ஆட்சியா் தெரிவித்தது:

நிகழாண்டில் தீபாவளிக்காக புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, சேலம், தஞ்சாவூா் பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதே போன்று, அனைத்து ரக பருத்தி சேலைகள், ஆா்கானிக், கலம்காரி சேலைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் மெத்தைகள், கையுறைகள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு உள்ளன.

தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூரில் (2 விற்பனை நிலையங்கள்) ஆகிய 3 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.2.80 கோடி தீபாவளி விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடன் வசதியில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கோ ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு தள்ளுபடியைப் பயன்படுத்தி, கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த உதவ வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் கோஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் காங்ககேயவேலு, நகராட்சி ஆணையா் வசந்தி, வட்டாட்சியா் விஜயகுமாா், விற்பனை நிலைய மேலாளா்கள் சிலம்பரசன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT