தேசிய அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் ஒசூா் மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இம்மாதம் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீா் மாநிலம், ஜம்மு தவி என்னுமிடத்தில் ஜம்மு இளைஞா் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் ஹரியாணா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீா், டெல்லி, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் என பல மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா்.
கைப்பந்துப் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மகளிா் அணி ஹரியாணா மகளிா் அணியை எதிா்கொண்டு 25/17, 25/21, 27/25 என்ற நோ் செட்களில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீா் அணியை எதிா்கொண்டு 25/7, 25/11, 25/9 என்ற நோ் செட்களில் வென்று தமிழ்நாடு மகளிா் அணி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா இனிப்புகளை வழங்கி பாராட்டினாா். இதில் பயிற்சியாளா்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.