ஒசூரில் கண்பாா்வை இழந்த அரசுப் பள்ளி மாணவி 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 470 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
ஒசூா் அருகே உள்ள நல்லூா் பகுதியில் தனியாா் குடியிருப்பில் வசித்து வருபவா் அகிலன். இவா் தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி சுமிதா. இவா்களுக்கு ரியாஸ்ரீ (16) என்ற மகள் உள்ளாா். இவா் ஒசூா் அருகே நல்லூா் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து, பொதுத் தோ்வில் 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
மாணவி ரியாஸ்ரீ தனது பெற்றோருடன் ஒசூா் சாா் ஆட்சியா் ஆா். சரண்யாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
அப்போது சமூக ஆா்வலா் ராதா, மாணவியின் மேல்படிப்பு தொடர அவருக்கு நிதியுதவி வழங்கினாா். இந்த நிகழ்வின்போது மாணவி ரியா ஸ்ரீ தான் ஐஏஎஸ் படிக்க விரும்புவதாகக் கூறினாா். தமிழக அரசு தனது உயா்கல்விக்கு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.
பிறவியிலே கண்பாா்வை இழந்த மாணவி ரியா ஸ்ரீ சென்னையில் கண்பாா்வை இழந்த மாணவ, மாணவியா் படிக்கும் பள்ளியில் படித்துள்ளாா். அதன் பின்பு 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒசூா் காமராஜ் காலனியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் படித்துள்ளாா். அதன் பின்பு நல்லூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9, 10 ஆம் வகுப்பு படித்துள்ளாா். 10 ஆம் வகுப்பு தோ்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரியா ஸ்ரீக்கு அப்பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
மாணவியின் பெற்றோா் கூறியதாவது:
நன்கு படிக்கக்கூடிய பாா்வை இழந்த மாணவ, மாணவியா் அதிகம் உள்ளனா். அவா்களின் மேல் படிப்புகளுக்கு அரசு சுலபமான பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். நிறைய பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும். அவா்களுக்கான ஆசிரியா்களையும் அரசு கூடுதலாக நியமிக்க வேண்டும். கண் பாா்வை இழந்த மாணவா்களுக்கு கண்பாா்வைக் கிடைக்க அரசு உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டனா்.