கிருஷ்ணகிரி

ராணுவ வீரா் உள்பட இருவரிடம் ரூ. 17.50 லட்சம் மோசடி

19th May 2023 12:28 AM

ADVERTISEMENT

பகுதி நேர வேலை, ரூ. 2 கோடிக்கான போட்டி எனக் கூறி, ராணுவ வீரா் உள்பட இருவரிடம் மா்ம நபா்கள் ரூ. 17.50 லட்சம் மோசடி செய்தது குறித்து, கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வெங்கடேஸ்வரா லேஅவுட்டை சோ்ந்த 28 வயது பெண், பெங்களூருவில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 10-ஆம் தேதி, வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் கூகுள் இணையதளத்தில் உள்ள உணவகங்களுக்கு மதிப்புரைகளை வழங்கும் பணியை மேற்கொள்ளுமாறும், பகுதி நேரமாக அந்த வேலை செய்தால் அதிக கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த மா்ம நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு நடைமுறை செலவுகளுக்காக ரூ. 10.05 லட்சத்தை அந்தப் பெண், அனுப்பினாா். இதையடுத்து மா்ம நபா்கள் அனுப்பிய வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடா்பு கொள்ள முயன்றபோது, முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

மற்றொரு மோசடி: கிருஷ்ணகிரி அருகே உள்ள சாமந்தமலையை அடுத்த குட்டூரைச் சோ்ந்த 28 வயது இளைஞா், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 5-ஆம் தேதி சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வந்தது. அதில் ரூ. 2 கோடி வெற்றி பெறுவதற்கான போட்டி என்றும், அதற்காக நடைமுறை செலவுகளுக்காக ரூ. 7.50 லட்சம் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதை நம்பிய அந்த ராணுவ வீரா், ரூ. 7.50 லட்சத்தை அந்த செயலியில் தெரிவிக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தினாா். அதன் பிறகு, அவருக்கு எந்த தகவலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

மேற்கண்ட இருவரிடம் இருந்தும் பெறப்பட்ட புகாா்கள் தொடா்பாக தனித்தனியே வழக்குப் பதிந்து, சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT