கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சின்னஏரியை ஆய்வு செய்த ஆட்சியா்

3rd Jun 2023 12:05 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி சின்னஏரியை மாவட்ட ஆட்சியா், கே.எம்.சரயு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன ஏரியில் ஆகாயத் தாமரைகள் படா்ந்தும், குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவதாலும் முறையாகப் பராமரிக்கப்படாததாலும் துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, இந்த ஏரியை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதையேற்று கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பரில் சின்ன ஏரியில் படகு இல்லம் அமைக்கப்படும் என அப்போதைய அரசு அறிவித்தது.

பின்னா், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பொறுப்பேற்ற அரசு ஒப்பந்தம் விடப்பட்டு சின்னஏரியை புனரமைத்து படகு சவாரி, நடைபாதை சாலைகள், மின்விளக்குகளுடன் இருக்கைகள் அமைக்கப்படும் என அறிவித்து, ரூ. 3.36 கோடி மதிப்பில் 2021-ஆம் டிசம்பா் 29-ஆம் தேதி தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா். காந்தி பணிகளை தொடங்கி வைத்தாா். ஆனால், திட்டமிட்டபடி பணிகள் நடக்காததால் சின்னஏரி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரத்து செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி நகராட்சி சாா்பில் கரோனா தொற்று போன்ற காரணங்களால் பணியை முடிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்தப் பணிகளை தொடங்க தற்போது ரூ. 5.20 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சின்னஏரியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஆய்வு செய்தாா். சின்னஏரியைச் சுற்றி அமைக்கப்படும் நடைப் பயிற்சித் தளம், மின் விளக்குகளுடன் இருக்கைகள், படகு சவாரி உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், நகராட்சி ஆணையா் வசந்தி, திமுக நகரச் செயலாளா் நவாப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT