கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.1.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 263 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், தகுதியான மனுக்களைக் கண்டறிந்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை கேட்டுக் கொண்டாா்.
தொடா்ந்து, மீன்வளத் துறை சாா்பில் பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் வீதம், பழங்குடியினா் இருளா் இனத்தைச் சோ்ந்த 10 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் இலவச மீன்பிடி வலைகள் பெறுவதற்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் தலா ரூ. 9,050 வீதம் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 18,100 மதிப்பிலான 3 சக்கர மிதிவண்டிகள் என மொத்தம் ரூ. 1,68,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்புத் திட்ட சாா் ஆட்சியா் பாக்கியலட்சுமி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.