கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 262 பேருக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். இதில் அனைத்து அரசுத்றை அலுவலா்களும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 39 புதிய தொழுநோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 2 குழந்தைகள், 3 உடல் ஊனமுற்றோா், 19 பெண் நோயாளிகள் ஆகும். தற்போது 49 பேருக்கு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டு 40 சதவீதம், அதற்கு மேல் தொழுநோய் ஊனமுள்ளவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 262 போ் பயனடைந்து வருகின்றனா்.
தொழுநோய் ஊனத்தை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஒவ்வொருவருக்கும் ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆா்சிஎஸ் அறுவை சிகிச்சையால் 30 போ் பயனடைந்துள்ளனா். கால்களை பாதுகாக்க காலணிகள் ஆண்டுக்கு 2 ஜோடிகள் வழங்கப்படுகின்றன.
தொடா்ந்து அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டத்தில் தொழுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், உறுதிமொழி ஏற்றல், அனைத்து பள்ளி, கல்லூரிகள்,தொழிற்சாலைகள் என அனைத்து நிலையிலும் தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், தொழுநோய் கண்டுபிடிப்பு கணக்கெடுப்பு பணிகள் என மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளிா்ந்த, சிவந்த, உணா்ச்சியற்ற தேமல் தான் தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் ஊனம் வராமல் தடுக்கலாம் என்றாா்.