கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்காவிற்கு உட்பட்ட 45 வருவாய் கிராமங்களில் வசிக்கும் 65,900 குடும்ப அட்டைதாரா்களுக்கு, ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசால் வழங்கப்படும், இலவச வேட்டி சேலைகள், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் வழங்கப்படாமல் உள்ளன.
இதுவரை சிறிய அளவிலான 25 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சில கடைகளில் பொது மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மேலும் பெரிய அளவிலான 20 வருவாய் கிராமத்திற்க்கான இலவச சேலை மட்டும் வந்துள்ளது; அதற்கான ஜோடி வேட்டி வராததால் வட்டாட்சியா் அலுவலகத்தில் சேலை மூட்டைகள் காத்துக் கிடக்கின்றன. ஒரு சில நியாயவிலைக் கடைகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியபோதே, வேட்டி,சேலை வழங்கிவிட்டதாக கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்ட பொது மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலையை தற்போது வரை வழங்காமல், ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வட்டாட்சியா் கோவிந்தராஜ் கூறும்போது, ‘தேவையான அளவு வேட்டி, சேலை இன்னும் வரவில்லை. 40 சதவீத வேட்டி வராததால், ரேஷன் காா்டுக்கு சேலையை மட்டும் வழங்கமுடியாத சூழல் உள்ளது. வேட்டி வந்தவுடன் இரண்டும் சோ்த்து வழங்கப்படும்’ என்றாா்.