புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 28 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்துமுனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் தொடங்கிவைத்தாா். இதில் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 592 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பல்வேறு குழுக்களாகக் களமிறங்கிய 146 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா்.
பல காளைகளை வீரா்கள் தீரத்துடன் அடக்கினாலும், பல காளைகள் பிடிபடவில்லை. அப்போது காளைகள் முட்டி 28 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.
காளைகளை அடக்கியோருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்புப் பணிகளை ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் தீபக்ரஜினி தலைமையிலான போலீஸாா் மேற்கொண்டனா்.