கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு உள்பட்ட 45 வருவாய் கிராமங்களில் வசிக்கும் 65,900 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுதோறும் தைப் பொங்கல் தினத்தையொட்டி, தமிழக அரசால் வழங்கும் இலவச வேட்டி, சேலை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து 1 மாதத்துக்கு பிறகு புதன்கிழமை லாரியில் வந்து இறங்கின.
இதுவரை சிறிய அளவிலான 25 வருவாய் கிராமங்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளன. அதிலும் சில கடைகளில் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும், பெரிய அளவிலான 20 வருவாய் கிராமங்களுக்கு பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலைகள் வந்து இறங்கியுள்ளன. இவை ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வட்டாட்சியா் கோவிந்தராஜியிடம் கேட்டபோது, புதன்கிழமைதான் இலவச வேட்டி, சேலைகள் வந்துள்ளன. வியாழக்கிழமை முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அவை அனுப்பி வைக்கப்படும் என்றாா்.