ஒசூா் அருகே எருதுவிடும் விழாவில் ஏற்பட்ட வன்முறை, தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது என கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில், அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
எருது விடும் விழா என்பது பாரம்பரியமாக விவசாயிகள், இளைஞா்களால் ஒரு திருவிழா போல நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முறைப்படுத்தி, அனுமதி கோரியவுடன் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட நிா்வாகம் உடனடியாக அனுமதி அளித்திருக்க வேண்டும். எருது விடும் விழா உத்தரவில் குளறுபடி, தாமதத்தால் இளைஞா்கள் உணா்ச்சிவசப்பட்டு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது, தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இந்த வன்முறை சம்பவத்தை போல, தமிழகம் முழுவதும் வேறெங்கும் நடக்காத வண்ணம், இது போன்ற விழாக்களுக்கு உடனடி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞா்களின் உணா்வுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தோ்தலில் அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னம் தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி கருத்து கூற முடியாது என்றாா்.