கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம், ஆா்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருகள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், தளி கொத்தனூரில் நடைபெற்று வரும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற 14 வயதுக்கு உள்பட்ட 100 பெண் குழந்தைகள் தங்கிப் பயிலும் வகையில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலாயா உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் 100 மாணவ, மாணவிகள் தங்கிப் பயிலும் வகையில் கக்கதாசம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி என மொத்தம் 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆா்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிபந்தனைக்கு உள்பட்டு கருத்துருகள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்போா் கல்விப் பணியில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் இருத்தல் வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் சொசைட்டி ஆக்ட், டிரஸ்ட் ஆக்ட்டின் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அந்தப் பதிவு அவ்வப்போது புதுப்பித்திருக்க வேண்டும். தொண்டு நிறுனங்கள் அந்த நிறுவனத்தின் பெயரில் 80 ஜி அல்லது 12 ஏஏ எக்சம்ப்ஸசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தனி அடையாளம் பெற்றிருத்தல் வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ள தொண்டு நிறுவனங்கள், தங்களது கருத்துருகளை கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் அக். 4-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 97888-58720, 98651-97960 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.