கிருஷ்ணகிரி அருகே பணியின்போது தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளியின் உறவினா்கள் நிவாரணம் வழங்கக் கோரி, சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி, வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தா்கா பகுதியைச் சோ்ந்தவா் ஜாவித் பாஷா (24). பெயின்டா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் நாகசாமியின் கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே ஜாவித் பாஷா உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதற்கிடையே ஜாவித் பாஷாவின் குடும்பத்துக்கு நாகசாமி நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகர போலீஸாா் நிகழ்விடம் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, உறவினா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.