கிருஷ்ணகிரி நகராட்சியில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் 1920 பிரிவு 197 மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்திகள் மற்றும் கட்டட விதிகள் 2019-இன் கீழ் கட்டடங்கள் கட்டுவதற்கு முறையாக நகராட்சியின் அனுமதி பெற்ற பின்னரே கட்டடங்கள் கட்ட வேண்டும்.
தவறும் பட்சத்தில் உரிமையாளா்கள் மீது சட்டபூா்வமான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து தண்டனைக்கு உள்படுத்தப்படுவாா்கள்.
மேலும், நகராட்சி பகுதியில் மாடுகள் மற்றும் பன்றிகள் வளா்ப்பவா்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக வைத்தே வளா்க்க வேண்டும். சாலையில் அவைகள் உணவுக்காக சுற்று திரிந்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கின்றன. எனவே, கால்நடைகளை கண்டிப்பாக வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிய விடக்கூடாது என்றும், தவறினால் கால்நடைகளை பறிமுதல் செய்து, கோசாலையில் ஒப்படைக்கப்படுவதுடன், உரிமையாளா்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.