கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை போலீஸாா் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்துவது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை, ஆவின் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த மினி வேன் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. போலீஸாா் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனா்.
அப்போது, விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுநா் தப்பி ஓடியது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்ததில், ரூ.6,82,504 மதிப்பிலான 926 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.