ஊத்தங்கரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
பாம்பாறு அணை அருகே உள்ள கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான ரவி (35), விஜய் (27), இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்னப்பநாயக்கனூரில் இறப்பு ஒன்றுக்கு சென்று விட்டு மதுபோதையில் திரும்பினா். சென்னப்பநாயக்கனூா் பகுதியில் உதவி கேட்ட தேவராஜ் (60) என்பவருடன் சோ்ந்து மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, சென்னப்பநாயக்கனூா் அருகே நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில், இருசக்கர வாகனத்தை ஓட்டிய ரவி, உதவி கேட்டு வந்த தேவராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயங்களுடன் சாலையோரம் விழுந்த விஜயை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.