ஒசூா் வரம் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை இரவு ஒசூா் வந்த திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் திமுக மூத்த நிா்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினாா். இதனைத் தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள வரம் மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
இதில், தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, வரம் மருத்துவமனை இயக்குநா்கள் மருத்துவா் வெங்கட், மருத்துவா் பிரியதா்ஷினி, மருத்துவ இயக்குநா் மருத்துவா் நாகேஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, வரம் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.