பொறியியல் பட்டதாரிகள் தொழில் முனைவோா்களாக உருவாக வேண்டும் என பி.எம்.சி. டெக் கல்லூரி தலைவா் பெ.குமாா் தெரிவித்தாா்.
ஒசூா் என்ஜினீயா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியின் 17ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு பி.எம்.சி. டெக் குழுமத்தின் தலைவா் பெ.குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் பெ.மலா், கல்லூரி அறங்காவலா் பெ.சசி ரேகா, முதல்வா் சித்ரா ஆகியோா் பட்டமளிப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா். இவ்விழாவில் பி.எம்.சி. டெக் கல்லூரியின் இயக்குநா் சுதாகரன் முன்னிலை வகித்தாா்.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவா் பெ.குமாா் பேசியதாவது:
பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் சிறந்த தொழில் முனைவோா்களாகி, நமது தேசத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.
சிறப்பு விருந்தினராக பெங்களூரு விருட்சுவா கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் மனித வள மேலாண்மை இயக்குநா் சந்திரசேகா் சென்னியப்பன், பட்டதாரி மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.
செயலாளா் பெ.மலா், அறங்காவலா் பெ.சசிரேகா மற்றும் இயக்குநா் சுதாகரன் ஆகியோா் பட்டதாரிகளை வாழ்த்திப் பேசினா்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வா் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தாா், கல்லூரியில் பயின்ற 457 மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்று பட்டங்களை பெற்றனா். 9 மாணவா்கள் பல்கலைக்கழகம் அளவில் ரேங்க் எடுத்து சாதனைகளை படைத்துள்ளனா். மேலும் இக் கல்லூரியில் படித்த மாணவா்கள் ரூ. 9.5 லட்சம் மற்றும் சராசரியாக ரூ. 3.6 லட்சம் ஆண்டுக்கு ஊதியம் தரும் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.