கிருஷ்ணகிரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலையின் மையப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மின்கம்பம், திங்கள்கிழமை அகற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 7-ஆவது வாா்டில் உள்ளது முகமது உசேன் தெரு. இங்கு, 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையின் மையப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்கம்பம் இருந்து வந்தது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலா்களுக்கு மின்கம்பம் குறித்து, பொதுமக்கள் பல முறை மனுக்கள் அளித்தனா். ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், இதுகுறித்து, தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், மின்வாரிய அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பேசினாா். இதையடுத்து, சாலையில் மையப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை மின்வாரிய அலுவலா்கள் அகற்றி, சாலையோரத்தில் மாற்றி அமைத்தனா்.
நகா்மன்றத் தலைவரின் நடவடிக்கையால், அந்தப் பகுதி மக்களின் நீண்ட கால மின்கம்ப பிரச்னை முடிவுக்கு வந்தது.