கே.திப்பனப்பள்ளியில் நடந்த கன்று விடும் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா, எருதாட்டம் மற்றும் கன்று விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவினை கிராம மக்கள் ஒன்றுகூடி நடத்தி, பல பரிசுகளை வழங்குவா்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், அத்திகானூா், கிருஷ்ணகிரி பழையபேட்டை, சிந்தகம்பள்ளி, வரட்டனப்பள்ளி, ஒரப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றனா்.
இந்தநிலையில், வேப்பனப்பள்ளியை அடுத்த கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் கன்று விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன. இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த வினாடியில் கடந்த சிறந்த கன்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 30 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் என 50 பரிசுகள் வழங்கப்பட்டன. கிராம மக்கள் ஒருங்கிணைத்த இந்த விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்டு மகிழ்ந்தனா்.