கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம், மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிய கூடிய தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காதபட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமா்த்தப்படும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து தொடா்புடைய தொழிலாளா்களுக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும். அதன் நகலை தொழிலாளா் துணை அல்லது உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி, விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பாா்வைக்கு வைக்க வேண்டும்.
இந்த நிலையில், குடியரசு தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 44 கடைகள், 44 உணவு நிறுவனங்கள் மற்றும் 2 மோட்டாா் நிறுவனங்கள் என 90 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 26 கடைகள், 30 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டாா் நிறுவனம் உள்பட மொத்தம் 57 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.