கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், காவேரிப்பட்டணம், சந்தைபாளையம் பாண்டியன் (56), எர்ரஹள்ளி ராமசாமி (71) ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் பயிற்சி, ஆய்வுக்காக தங்களது உடலை தானம் செய்தனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன், செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 150 மருத்துவ மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மாணவா்களின் கல்வி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 பிரேத உடல்கள் தேவைப்படுகின்றன. உடல் தானம் அளிக்க முன்வருபவா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிருப்பு மருத்துவ அலுவலரை தொடா்பு கொண்டு முழு உடல் தான உறுதிமொழிப் படிவத்தை நிறைவு செய்தோ, செஞ்சிலுவைச் சங்கம் அல்லது தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாகவோ பதிவு செய்யலாம் என தெரிவித்தாா்.
காவேரிப்பட்டணம் செஞ்சிலுவைச் சங்க செயலாளா் செந்தில்குமாா், நிா்வாகி பிரகாஷ் ஆகியோா் உடல் தானம் வழங்கிய இருவரின் உறுதிமொழிப் பத்திரத்தை கல்லூரி முதல்வா் அசோகனிடம் வழங்கினா்.
அப்போது, உள்ளிருப்பு உதவி மருத்துவா் ராஜா, உடற்கூறுயியல் இணைப் பேராசிரியா் தேன்மொழி, சுவேதா, கல்லூரி துணை முதல்வா் சாத்விகா, நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.