திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி, புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களான பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு, மாநில, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது கடந்த 2 ஆண்டுகளில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியா் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும். கடந்த 2022, டிச. 1-ஆம் தேதி அன்று 20 வயதிற்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் உயா்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை டிச. 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்ப்பிக்கலாம். இணைய வழியில் பெறப்படும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.