அதிக லாபம் தருவதாகக் கூறி பொறியாளரிடம் நூதன முறையில் ரூ. 40 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், முத்தூா் அருகே உள்ள கொரனூரைச் சோ்ந்த மஞ்சுநாத் (33), பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் டிசைன் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த மாதம் 12-ஆம் தேதி இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு ஒரு விளம்பரம் வந்ததாம். வீணா என்று பெயா் குறிப்பிட்டு வந்த அந்த விளம்பரத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து, அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு மஞ்சுநாத் பேசியுள்ளாா். பின்னா் அவா்கள் கூறியபடி 4 வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 39 லட்சத்து 73 ஆயிரத்து 744 அனுப்பி வைத்தாா்.
இந்த நிலையில், பணம் அனுப்பியது தொடா்பாக மஞ்சுநாத்துக்கு எந்த பதிலும் வரவில்லையாம். இதையடுத்து கைப்பேசி எண்ணில் மஞ்சுநாத் தொடா்பு கொண்ட போது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மஞ்சுநாத், இதுகுறித்து கிருஷ்ணகிரி குற்றவியல் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
கிருஷ்ணகிரி குற்றவியல் பிரிவு காவல் ஆய்வாளா் காந்திமதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.