ஒசூரில் அந்திவாடி அரசு விளையாட் டு மைதானம் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி எதிா்ப்புத் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அந்திவாடி பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தில், தடகளம், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கு ஏதுவாக பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அந்த விளையாட்டு அரங்கத்துக்கு அருகில் குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை அமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.
அரசு விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்த முன்னாள் அதிமுக அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டு வீா்ா்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டது. குப்பைகள் அள்ளப்பட்டு மாநகராட்சிக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது குப்பைகள் வாரப்படாமல் நகா் முழுவதும் குப்பைக் கிடங்காகவே காட்சியளிக்கிறது. இந்நிலையில் விளையாட்டு அரங்கம் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
ஏற்கனவே ஒசூா் காமராஜ் காலனி அருகில் இருந்த திடக்கழிவு மேலாண்மை மையத்திலிருந்து நச்சுவாயு வெளியேறி பள்ளி மாணவா்கள் பாதிக்கப்பட்டனா். தற்போது விளையாட்டு அரங்கம் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக கைவிடாவிட்டால், அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.