கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால், நகரில் செயல்பட்டு வந்த பழைய மாவட்ட மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் அண்மையில் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்து, கிருஷ்ணகிரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, 50 படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினா்.
இதனைத் தொடா்ந்து, நகரில் உள்ள பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ஆணையிட்டுள்ளாா். அதில், கிருஷ்ணகிரி பழைய மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கட்டடங்களை பயன்படுத்தி, உள்நோயாளிகள் பிரிவு, இதர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, இதுதொடா்பாக பணியாளா், உபகரணங்கள் ஒப்பளிக்க அரசின் அனுமதி ஆணை பெறப்படும் வரையில் புறநோயாளிகளை பிரிவை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், அப்பகுதியினா், சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.