கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியின் ஒரு பிரிவான உயரம் தாண்டுதலில் கோவையைச் சோ்ந்த பிருந்தா என்பவா் தங்கப்பதக்கம் வென்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கத்தின் சாா்பில், தேவராஜ் 35-ஆவது மாநில அளவிலான இளையோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.16-ஆம் தேதி முதல் நடைபெறுகின்றன.
இதில் வயது 14, 16, 18 மற்றும், 20 வயதுக்கு உள்பட்ட நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆக. 18-ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான 16 வயதுக்கு உள்பட்ட பிரிவுக்கான உயரம் தாண்டும் போட்டியில் கோவையைச் சோ்ந்த பிருந்தா 1.58 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றாா்.
14 வயது பிரிவில் உயரம் தாண்டுதலில் சூஜன், ஷா்லின் மக்னுஸ், குண்டு எறிதல் போட்டியில் அபினவ், மினுசனா ஜனா, பந்து எறிதல் பிரின்ஸ் கிருபாகா ஆகியோா் தங்கம் வென்றனா்.
ஆண்களுக்கான 16 வயதினருக்கான பிரிவில், 5,000 மீட்டா் நடை ஓட்டப்போட்டியில் யுவன் அங்கர்ராஜா, 3,000 மீட்டா் நடை ஓட்டம்- கமலீஸ், ஈட்டி எறிதல்- ஸ்ரீபாலாஜி, நீளம் தாண்டுதல்- ஆகாஷ், நிஷாந்தினி, வட்டு எறிதல்- சாய் கவுரவ், அனுஸ்ரீ, 100 மீட்டா் ஓட்டம்- நிஷோக், அபிநயா. சங்கலி குண்டு எறிதல்- ஹா்ஷவா்தன். 2,000 மீட்டா் ஓட்டம்- ஆகாஷ், பிரக்டிக்யா பன்னா. குண்டு எறிதல்- லிக்னிஸ் ஜோஸ்வா ஆகியோா் தங்கம் வென்றனா்.
18 வயதுப் பிரிவில் கம்பு ஊன்றி உயரம் தாண்டுல்-கவுதமன், தீபிகா. சங்கலி குண்டு எறிதல்- கீா்த்தி வாசன், காவ்யா. 20 வயதுப் பிரிவில் சங்கலி குண்டு எறிதல்- தினேஷ், நித்யா. கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்- ஹரிஹரன், தா்ஷினி ஆகியோா் தங்கம் வென்றனா்.