கந்திகுப்பம் அருகே சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ள பாலேப்பள்ளி ராம் நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி. தூய்மைப் பணியாளா். இவரது மகன் முருகேசன் (16). கரோனா ஊரடங்குக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை. அவ்வப்போது சிறு தொழில்களை செய்து வந்தாா். இச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் வசித்து வருபவா் பிரபு (27).
இவா்கள் இருவீட்டு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் ராம்நகரில், புதன்கிழமை நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, இரண்டு குடும்பத்தினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆவேசமடைந்த பிரபு, முருகேசனை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கினாா். பலத்த காயம் அடைந்த முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தக் கொலை தொடா்பாக கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, அவரது அண்ணன் திருப்பதி, தாயாா் பொட்டு அம்மாள் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.