கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுதந்திர தின விழாவுக்கு விடுமுறை வழங்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எம். வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டத்தின்கீழ் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காதபட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமா்த்தப்படும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து தொடா்புடைய தொழிலாளா்களுக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும். அதன் நகலை தொழிலாளா் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பாா்வைக்கு வைக்க வேண்டும்.
இந்தநிலையில் சுதந்திரத் தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடைகள், உணவு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு, திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில், 68 கடைகள், 46 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 114 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத 60 கடை நிறுவனங்கள், 41 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 101 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.