ஒசூரில் பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை இறந்தது குறித்து பெற்றோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளியைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (32). இவரது மனைவி யசோதா (28). இவருக்கு ஒசூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிறந்த பெண் குழந்தை சிறிது நேரத்தில் இறந்தது.
இதுகுறித்து ஒசூா் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் சக்திவேல் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதில் குழந்தை பிறந்த போது ஆரோக்கியமாக இருந்ததால் குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளாா்.
அந்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் சிவகுமாா் விசாரித்தாா். சந்தேக மரணம் பிரிவின் கீழ வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.