வீராட்சிகுப்பம் ஊராட்சியில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்கு தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வீராட்சிகுப்பம் ஊராட்சியில் அக். 2-ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கருவனூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் எனவும், இதில் வீராட்சிகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள், மகளிா் சுயஉதவிக் குழு, தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஊராட்சியின் சாா்பில் தண்டோரா மூலம் துண்டு அறிக்கையை கொடுத்து அழைப்பு விடுத்தனா்.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளை எடுத்துரைக்கலாம். இதில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பிரபு, ஒன்றியக் கவுன்சிலா் வீரபத்திரன், ஊராட்சி செயலாளா் சுரேஷ், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொள்கின்றனா் என தெரிவிக்கப்பட்டது.