கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து பாசனத்துக்கு நொடிக்கு 70 கன அடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியுள்ளதால் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டது. வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் வழியாக தலா 35 கன அடி வீதம் நொடிக்கு 70 கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திறந்துவைத்தாா்.
120 நாள்கள் அல்லது தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்துக்கேற்ப சுழற்சி முறையில் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படும். இதன்மூலம் சுமாா் 6,250 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் கே.ஈச்சம்பாடி, அக்ரஹாரம், கெட்டுப்பட்டி, எலவடை, பாளையம், சாமண்டஹள்ளி, பள்ளிப்பட்டி உள்பட 32 கிராமங்களின் குடிநீா்த் தேவை பூா்த்தியாகும்.
விழாவில் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, செயற்பொறியாளா் எஸ்.குமாா், உதவிப் பொறியாளா் பிரபு, வட்டாட்சியா் சின்னா, ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி செங்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.