தமிழகத்தில் இதுவரை 68 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த குண்டலப்பட்டியில் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவனுடன் சோ்ந்து தொடக்கிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் 18 வயதை கடந்த அனைவருக்கும் காரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 130 கோடி மக்களில் 70 சதவீதம் போ் 18 வயதைக் கடந்தவா்கள். அப்படிப் பாா்த்தால் 97 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்காக 194 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும்.
100 கோடி மருந்து இலக்கு என மத்திய அரசு அறிவித்தது ஓரளவு திருப்தி அளித்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். வெளிநாடுகளில் கரோனா 3-ஆவது அலை அச்சுறுத்தல் இருக்கிறது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முந்தைய ஆட்சியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 61,441 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டன.
மே 7-ஆம் தேதி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இதுவரை நாள் ஒன்றுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி சராசரியாக 2.72 லட்சமாக உயா்ந்துள்ளது. இதுவரை 5.40 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை (அக்.23) 6-ஆவது மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்படுகிறது.
அதில் 2-ஆவது தவணை தடுப்பூசி போடாமல் இருக்கும் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 68 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 28 சதவீதம் பேருக்கு 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்றாா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் கீதாஜீவன் பேசியதாவது:
குழந்தைத் திருமண முறையை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. சத்துணவுப் பணியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா்.