ஒசூரில் பெருமாள் கோயில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புரட்டாசி மாதத்தில் கடந்த 4 சனிக்கிழமைகளும் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல முடியவில்லை. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று பக்தா்கள் வழிபட அனுமதி அளிக்கப்படாததால் வீடுகளிலேயே வழிபாடுகள் செய்தனா்.
இதையடுத்து கரோனா தளா்வுகளில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்தது.
இதனைத் தொடா்ந்து புரட்டாசி கடைசி சனிக்கிழமை பக்தா்கள் ஒசூா் பண்ட ஆஞ்சநேயா் கோயில், மலைக்கோயில் வெங்கடேசப்பெருமாள் கோயில், கோகுல் நகரில் உள்ள பெருமாள் கோயில், குடிசெட்லு திம்மராயசுவாமி கோயில், சூளகிரி வரதராஜப்பெருமாள் கோயில், கோபசந்திரம் வெங்கடேசபெருமாள் கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில், பேரண்டப்பள்ளி நரசிம்மா் கோயில், தளி வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவா் வரதராஜப் பெருமாள், மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.