கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மதிப்பிழந்த ரூ. 65 ஆயிரம் பணத்தாள்களை வைத்திருந்த மாற்றுத் திறனாளிக்கு சென்னையைச் சோ்ந்த நபா் உதவியுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக் கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், மக்கள் குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 197 மனுக்கள் பெறப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சின்னகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணு(65), இருபாா்வையையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவா் கடந்த மாதம் 18-ஆம் தேதி, பணமதிப்பிழந்த 65 ஆயிரத்துக்கான பணத்தாள்களை மாற்றித்தர உதவும்படி மனு, மக்கள் குறைதீா்த் கூட்டத்தில் மனு அளித்தாா். இதுகுறித்த செய்தி வெளியானது.
இதை அறிந்த, சென்னை, தி.நகரைச் சோ்ந்த பட்டாபிராமன்(70) என்பவா், மாற்றுத்திறனாளியான சின்னகண்ணுவுக்கு உதவ முன்வந்தாா். அதன்படி, அவா், ரூ. 65 ஆயிரத்தை மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வைத்தாா். இதை பெற்றுக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, மாற்றுத்திறனாளியான சின்னகண்ணுவிடம் காசோலையாக வழங்கினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.