கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வந்த முதலீட்டாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர் என்று தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள த.மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கிய ஒசூர் விஸ்வநாதபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்கா கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டனர். பத்தாண்டு காலம் இந்த தொழில்நுட்ப பூங்கா கட்டி முடித்து உள்ளது.
இதேபோல தமிழகத்தில் பல திட்டங்கள் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை அதை அப்படியே கிடப்பில் போடப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் ஒரு அமைச்சர் இருந்து பணியாற்றியதற்கான எந்த தடையமும் இல்லாத நிலைதான் இந்த துறையில் இருக்கிறது.
இதனால் நிறைய முதலீட்டாளர்கள் தமிழகத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்கள் குறிப்பாக கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். மீண்டும் அவர்கள் எல்லாம் தமிழகத்தை தேர்வு செய்யும் அளவுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நிச்சயம் முயற்சி செய்வோம். ஏராளமான இளைஞர்கள் பணி செய்வதற்கு தயாராக உள்ளனர். அதற்குரிய அறிவும் திறனும் அவர்களுக்கு இருக்கிறது. அதை ஊக்கப்படுத்த அதற்கு தேவையான முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகிறோம் என அமைச்சர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகன், எஸ்- ஏ- சத்யா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் மீரஜ்மிட்டல் ஐஏஎஸ், எல்காட் மேலான்மை இயக்குனர் அஜய்யாதவ் ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெய்சந்திரபானுரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.