உங்கள் முகத்தை பார்க்க வேண்டும் முகக்கவசத்தை ஒரு நிமிடம் அகற்றுங்கள் எனக் கூறிய பெண்ணின் விருப்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை துவக்கி வைக்கவும் ஓசூரில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை காணொலிக் காட்சி வாயிலாக துவங்கி வைக்கவும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஓசூர் வந்தார். இதன்பின்னர் அவர் அரசு நிகழ்ச்சியில் முடித்துக்கொண்டு மீண்டும் விமான தளத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார்.
இதையும் படிக்கலாமே | தமிழகத்தில் புதிதாக 1,997 பேருக்கு கரோனா
விமான நிலையம் உள்ள பெலகொண்டபள்ளி உள்ள விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஓசூர் உழவர் சந்தை அருகில் முதல்வரின் கார் மெதுவாக சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு பெண் முதல்வரின் காரை பார்த்து மனு கொடுக்க முயற்சித்தார். அப்போது முதல்வர் அந்த மனுவை வாங்க முற்படும்போது உங்கள் முகத்தை பார்க்க வேண்டும், முகக்கவசத்தை ஒரேஒரு நிமிடம் கழற்றுங்கள் என அந்தப் பெண் கூறினார்.
முதல்வர் ஒரு நிமிடம் முகக்கவசத்தை கழற்றினார். அப்பொழுது முதல்வரை பார்த்து விடாமுயற்சி விசுவரூப வெற்றி அதுதான் ஸ்டாலின் என தெரிவித்தார். பிறகு அந்தப் பெண் கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினார். முதல்வர் பெற்றுக்கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் சென்றார். அந்தப் பெண் யார் என்று விசாரித்தபோது ஓசூர் பழைய டெம்பிள் அட்கோ பகுதியைச் சேர்ந்த ரம்யா என தெரியவந்தது.
அதன் பிறகு அவரிடம் விசாரித்த பொழுது எங்களது நீண்ட நாள் முதல்வரை பார்க்க வேண்டும் என்று விரும்பி இருந்தோம். அவர் முகத்தை கழற்றச் சொல்லி பார்த்தும் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என தெரிவித்தார்.