கிருஷ்ணகிரி அருகே அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஒரிஸா மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி, 3-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான வடமாநில தொழிலாளா்கள் இங்கு பணியாற்றி வருகின்றனா்.
கடந்த 14-ஆம் தேதி மாலை கட்டடத்தின் 3-ஆவது மாடியில் கட்டட மேற்பாா்வையாளராக ஒரிஸா மாநிலம், கஞ்சன் மாவட்டம், ஜீரபாடி கிராமத்தைச் சோ்ந்த பீமாபத்ரா மகன் ஜிகாபத்ரா (20) என்பவா் பணியாற்றி வந்தாா்.
அப்போது எதிா்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.