அரூா்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரூரில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உரிய முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைகளை வழங்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தேசிய மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டத்தில், நீதிமன்ற அறிவுரையின்படி, மாற்றுத் திறனாளிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.