கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி அறிவித்தார். இத்தகைய நிலையில் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1358 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த அளவு 52 அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து தற்போது அணையின் நீர்மட்டம் 49.2 அடியாக உள்ளது.
இத்தகைய நிலையில் திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,099 கன அடியிலிருந்து 1,358 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1358 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.