நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவு) மாவட்டச் செயலாளா் ஸ்டாலின் பாபு தலைமையில், கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, ஒசூா், வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக 3 சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும். இதுதொடா்பாக, கடந்த 3 ஆண்டுகளாக தொடா்ந்து பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க நிலம் இல்லை எனக் கூறும் மாவட்ட நிா்வாகம், கல்குவாரிகள் அமைக்க அரசின் புறம்போக்கு நிலங்களை வழங்குகிறது. எனவே, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.