ஒசூா் மாநகராட்சி ஆனந்த் நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துதர வலியுறுத்தி, ஆனந்த் நகா் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட டைட்டான் கடிகாரம் தொழிற்சாலை அருகில் உள்ளது ஆனந்த் நகா். இந்த நகரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் 15 ஆண்டுகள் வசித்து வரும் தங்கள் பகுதிக்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும். மேலும் கழிவுநீா் சாலையில் செல்வதைத் தடுத்த நிறுத்த வேண்டும். தங்கள் பகுதிக்கு குடிநீா் முறையாக விநியோகம் செய்ய வேண்டும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்துக்குக் கோரிக்கை மனுவுடன் வந்தனா்.
அங்கு ஒசூா் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் மணியிடம் மனுவை அளித்தனா். மனுவை பெற்ற சுகாதார ஆய்வாளா் இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் கூறி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.