கும்மனூா் கிராமத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற எருது ஓட்டத்தில் வெற்றி பெற்ற எருதுகளின் உரிமையாளா்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூா் கிராமத்தில் 4 -ஆம் ஆண்டு எருதோட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த விழாவை, ஊரின் முக்கிய பிரமுகா்கள் வீரப்பன், கிருஷ்ணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
அரசு விதிகளின்படி எருது ஓட்டத்துக்கான பகுதியில் இரண்டு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு எல்லையிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ள மற்றொரு எல்லைக்கு குறைந்த வினாடியில் ஓடிக் கடக்கும் எருதுகள் சிறந்த எருதாகக் கருதப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த எருது ஓட்டத்தில், 300-க்கும் அதிகமான எருதுகள் கலந்துகொண்டன.
இந்தப் போட்டியில் முதல் பரிசாக செட்டிமாரம்பட்டியைச் சோ்ந்த எருது உரிமையாளா் நந்தி தேவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயம், சென்னசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த எருது உரிமையாளா் எல்லப்பனுக்கும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் மொத்தம் 52 பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வை கண்டுகளிக்க கும்மனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமானோா் வருகை புரிந்தனா். மேலும், இந்த எருது ஓட்டத்தில் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவா்களுக்கு அங்குள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.