பழுதடைந்து காணப்படும் மல்லாபுரம் - பென்னாகரம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்குள்பட்ட மல்லாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மல்லாபுரம் பகுதியில் இருந்து மல்லாபுரம் காலனி, நாகனூர், ஜங்கமைனூர் மற்றும் பென்னாகரம் வரை செல்லக்கூடிய இந்த சாலையானது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பென்னாகரம் ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்டது.
இந்த சாலையானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் இந்த சாலையானது மல்லாப்புரம் ஏரிக்கரையின் மீது செல்லுவதால், பழுதடைந்த சாலையில் பயணிக்கும் போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகவும், ஏரிப்பகுதியில் விழுந்துவிடும் அபாயமும் உள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என மல்லாபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.