ஒகேனக்கல் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பென்னாகரத்தில் எஸ்.பி. தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஒகேனக்கல் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தருமபுரி மாவட்டக் காவல் கண்கானிப்பாளர் ராஐன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து இரண்டாவது நாளாக மர்ம நபர்களை வனப் பகுதியில் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் பென்னாகரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனப் பகுதியில் நுழைந்துள்ள மர்ம நபர்களை விரைவில் பிடிக்க வேண்டும், வனப் பகுதியில் சந்தேகிக்கும் நபர்களை விசாரிக்க வேண்டும், தொடர்ந்து வாகனங்களை சோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒகேனக்கல் போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.