வேப்பனஅள்ளி அருகே மகளை காதல் திருமணம் செய்த மருமகனை, அரிவாளால் வெட்டிய மாமனாரை போலீஸார், திங்கள்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள குரியனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் அருணா (23). இவரும் தரணிசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவேறு சாதிகளைச் சேர்ந்த இவர்கள், கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, வெளி மாநிலத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், இருவரும், கடந்த இரண்டு மாதங்களாக தரணிசந்திரம் கிராமத்தில் வசித்து வரும் தகவல் அறிந்த நாகராஜ், தரணிசந்திரம் கிராமத்துக்குச் சென்று, சேட்டுவை அரிவாளால் வெட்டினார். இதில், அவர் காயமடைந்தார். இதுகுறித்து, சேட்டு, அருணா ஆகிய இருவரும் அளித்த புகாரின் பேரில், வேப்பனஅள்ளி போலீஸார், வழக்குப் பதிந்து, நாகராஜை கைது செய்தனர்.