சூளகிரி அருகே செல்லிடப்பேசி வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே புலியரசி அருகே உள்ள குருபரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் ஞாயிற்றுக்கிழமை சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, செல்லிடப்பேசியை தலைக்கவசத்துக்குள் வைத்து பேசியபடி சென்றுள்ளார்.
அப்போது, அதிக வெப்பம் காரணமாக செல்லிடப்பேசி திடீரென வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயமேற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.