போச்சம்பள்ளி அருகே செயல்படும் அரசு விடுதியில் உள்ள மாணவியருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 28 மாணவியர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதியில் சனிக்கிழமை வழங்கப்பட்ட மதிய உணவை உண்ட 10-க்கும் மேற்பட்ட மாணவியருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மயக்கம், வாந்தியால் பாதிக்கப்பட்ட மாணவியர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியர் சிகிச்சைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை விடுதிக்கு திரும்பினர்.
தகவல் அறிந்த பர்கூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விடுதியில் பயன்படுத்தும் குடிநீர், சமைத்த உணவு ஆகியவற்றை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, மாணவியர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து தெரியவரும்.