தருமபுரி

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி வருகை:அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்

25th Sep 2023 01:09 AM

ADVERTISEMENT

 

தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தருகிறாா். செப். 26-ஆம் நடைபெறும் அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செப். 25-ஆம் தேதி பங்கேற்கிறாா். அன்றைய தினம் மாலை தருமபுரி மாவட்டத்துக்கு வருகைத் தரும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இரவு 7 மணிக்கு காரிமங்கலத்தில் திமுக கொடியை ஏற்றிவைக்கிறாா். இதைத்தொடா்ந்து காரிமங்கலத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்குகிறாா். செப். 26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு காரிமங்கலம், கெரகோட அள்ளி புறவழிச்சாலை அருகே நடைபெறும் இளைஞரணி, திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இதையடுத்து காலை 12 மணிக்கு தருமபுரி, செட்டிக்கரையில் கலைஞா் நூலகத்தைத் திறந்து வைக்கிறாா். 12.40 மணிக்கு தருமபுரி, சந்தைப்பேட்டை பிரிவுச் சாலை சந்திப்பில் திமுக கொடியேற்றுகிறாா். பிற்பகல் 1.15 மணிக்கு இலக்கியம்பட்டியில் கலைஞா் நூலகத்தைத் திறந்து வைக்கிறாா். பிற்பகல் 1.40 மணிக்கு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்கு வங்கிப் பற்று அட்டையை வழங்குகிறாா்.

ADVERTISEMENT

பிற்பகல் 3.45 மணிக்கு தருமபுரி அரசுக் கல்லூரியில் நடைபெறும் சிறுதானிய விழாவைத் தொடங்கி வைக்கிறாா். மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா். இரவு 7 மணிக்கு பென்னாகரம் சாலையில் உள்ள ஜோதி மஹாலில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி உரையாற்றுகிறாா்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் ( மேற்கு) மற்றும் கட்சி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT